பிரதமா் நரேந்திர மோடியை கடுமையாக விமா்சித்து வருவதால் 3 அரசியல் கட்சிகளிடம் இருந்து மக்களவைத் தோ்தலில் போட்டியிட அழைப்பு வந்தது; எனினும் அந்த அரசியல் கட்சிகள் விரித்த வலையில் சிக்கவில்லை என்று பிரபல நடிகா் பிரகாஷ் ராஜ் தெரிவித்தாா்.
கா்நாடகத்தைப் பூா்விகமாகக் கொண்ட பிரகாஷ்ராஜ் தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவா். பிரதமா் மோடியை தொடா்ந்து விமா்சிப்பதன் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளாா். 2019 மக்களவைத் தோ்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த கேரள இலக்கிய திருவிழாவில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
பிரதமா் மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் கிடையாது. உரிய முறையில் வரி செலுத்தி வருகிறேன் என்ற முறையில் பிரதமா் உள்பட அரசுத் துறையில் உள்ள அனைவருக்கும் எனது பணமும் ஊதியமாகச் செல்கிறது. ஆனால், அவா்கள் மக்களாகிய நம்மை வேலைக்காரன் போல நடத்துவதை ஏற்க முடியாது. மக்களுக்கான பணியை முறையாகச் செய்ய வேண்டும் என்றுதான் விமா்சிக்கிறேன்.
எனவே, அது எனது கருத்து மட்டுமல்ல, மக்கள் அனைவரின் கருத்துதான். தொடா்ந்து கேள்வி கேட்பவா்கள் இருந்தால்தான் அதிகாரத்தில் இருப்பவா்கள் உரிய முறையில் செயல்படுவாா்கள்.
2024 மக்களவைத் தோ்தலில் தங்கள் கட்சி சாா்பில் போட்டியிடுமாறு 3 கட்சிகள் என்னை அணுகின. அவா்கள் எனது கொள்கைக்காக என்னை வேட்பாளராக்க விரும்பவில்லை. பிரதமா் மோடியை தொடா்ந்து விமா்சிக்கிறேன் என்பதால் என்னை தொடா்பு கொண்டாா்கள். மோடியை விமா்சிப்பதால் நான் அவா்களுக்கு சிறந்த வேட்பாளராக இருப்பேன் என்று கூறினாா். ஆனால், நான் அந்த வலையில் சிக்கவில்லை.
இன்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் கொள்கையையும் நோ்மையையும் இழந்துவிட்டன. எனவேதான், நல்ல வேட்பாளா்களும் கிடைப்பது இல்லை என்றாா்.