உத்தரகண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் அரசு வரும் பிப்ரவரி 5 முதல் 8 வரை 4 நாள்கள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அவை உடனடியாக ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் தளத்தில், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் எங்கள் அரசு எப்போதும் உறுதியுடன் உள்ளது. வரும் கூட்டத்தொடரில் யுசிசி மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது சிவில் சட்டம்(யுசிசி) அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனாபிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு பிப்ரவரி 2ஆம் தேதி மாநில அரசிடம் தனது வரைவைச் சமர்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வரும் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மாநில அரசு நிறைவேற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.