கரூரில் பேருந்து கூடும் கட்டும் நிறுவன காவலாளியை கொன்றுவிட்டு, பேருந்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் இன்று கைது செய்தனர்.
கரூர் பெரியகுளத்துப்பாளையம் அருகே உள்ள காயத்ரி நகரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (65). இவர் கரூர், சேலம் புறவழிச்சாலையில் உள்ள பேருந்து கூடு கட்டும் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை இந்த நிறுவனத்துக்கு தொழிலாளிகள் வேலைக்குச் சென்றன. அங்கு காவலாளி சின்னச்சாமியை காணவில்லை. இதையடுத்து அவரை தேடினர். அங்குள்ள அறை ஒன்றின் இரும்புக் கதவில், சின்னச்சாமி கை, வாய் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
மேலும், அங்கு புதிதாக கூடு கட்டி நிறுத்தப்பட்டிருந்த பேருந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த தொழிலாளிகள் இதுகுறித்து வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிறுவனத்துக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுனில், மனோஜ் உள்ளிட்ட சிலர் பேருந்து ஒன்றை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கூடு கட்ட கொடுத்திருந்தனர். அந்தப் பேருந்து கூடு கட்டப்பட்டு தயாராக இருந்தது. வெள்ளிக்கிழமை பேருந்தை எடுத்துச் செல்ல வந்த கேரள நபர்கள் இருவர் மறுநாள் (சனிக்கிழமை) கூடு கட்டியதற்கான தொகையை செலுத்திவிட்டு பேருந்தை எடுத்துச் செல்வதாகக் கூறி, அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். சனிக்கிழமை அவர்கள் இருவரும் அறையில் இல்லை. அறைச்சாவி சின்னசாமி உடல் அருகே கிடந்தது. எனவே, கேரளாவை சேர்ந்த அந்த 2 மர்ம நபர்கள் காவலாளி சின்னச்சாமியை கொலை செய்துவிட்டு, பேருந்து, மோட்டார் சைக்கிளை ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இதை அடுத்து வெங்கமேடு போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர்.
இதனிடையே கேரளத்தைச் சேர்ந்த மனோஜ், ஓட்டுநர் ரெங்கப்பன் ஆகிய இருவரையும் தமிழக எல்லையான காக்காசாவடியில் போலீஸார் இன்று கைது செய்தனர்.