சின்மயி டிவிட்டரில் ஆபாச கருத்துகள் விடுத்த 2வது நபர் கைது

கிரைம் பிரிவு போலீஸார், @losongelesram, @vivajial, @rajanleaks, @senthilchn, @thyirvadai, Asharavkay ஆகிய ஆறு பேர் குறித்து விசாரணை
சின்மயி டிவிட்டரில் ஆபாச கருத்துகள் விடுத்த 2வது நபர் கைது

பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக 6 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

தன்னைப் பற்றியும் தன் தாயாரைப் பற்றியும் மோசமாக சித்திரித்து கருத்துகள் எழுதுவதாக அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் நேற்று நிப்ட் மையத்தின் துணை பேராசிரியர் சரவணக்குமார் பெருமாள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையிலும், மேலும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடைப்படையிலும், ஏ.ராதாமணாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள தர்பார் ஹோட்டல் முன்பு செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் இவர். இவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மிகவும் துடிப்பான உறுப்பினர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர், சின்மயிக்கு தான் எழுதிய கருத்துகள் குறித்து ஒப்புக்கொண்டார். மேலும், தனது @rajanleaks என்ற பெயரிலான தளம் குறித்தும், தான் அதன் மூலம் சின்மயிக்கு ஆபாசக் கருத்துகளை எழுதியதையும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் இவர் எழும்பூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில், கிரைம் பிரிவு போலீஸார், @losongelesram, @vivajial, @rajanleaks, @senthilchn, @thyirvadai, Asharavkay ஆகிய ஆறு பேர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com