இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் நேரில் வலியுறுத்தியாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மீனவர்கள் 40 பேர் இலங்கை சிறையில் இருப்பதைப் பற்றி பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை இன்று நேரில் சந்தித்து, அவரிடம் விவரங்கள் கூறி நாகை மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
அவர் இதுகுறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தோடு தொடர்பு கொண்டு பேசுவதாக உறுதியளித்தார். பிறகு வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் நேரில் சந்தித்து நாகை மீனவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தினேன். அவரும் தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங்கை அரசோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்தபோது இலங்கையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கிற ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கும்படி வற்புறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். நாகை மீனவர்களையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். எனவே தமிழக மீனவர்கள் கண்டிப்பாக இலங்கை சிறையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
-இவ்வாறு பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.