கிரடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது, காசாளரிடம் உங்கள் கார்டைக் கொடுத்துவிட்டு அதனை கவனமாகப் பாருங்கள் என்கிறார்கள் காவல்துறையினர்.
டெல்லியில், போலியான கிரடிட் கார்டை தயாரித்து அதன் மூலம் பல கோடி ரூபாய்களை சுருட்டிய 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த கும்பலின் செயல்பாடு குறித்துத் தெரிவித்த காவல்துறை அதிகாரி, மிகப் பெரிய கடைகளில் பணியாற்றும் காசாளர்களோடு இவர்கள் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு ஸ்கிம்மர் என்ற கருவியை அவர்களுக்கு கொடுக்கின்றனர்.
ஒரு கிரடிட் கார்டை காசாளர் வாங்கியதும், கிரடிட் கார்ட் கருவியில் ஒரு முறை தேய்த்து விட்டு, இந்த ஸ்கிம்மர் கருவியில் வாடிக்கையாளருக்குத் தெரியாமல் ஒரு முறை தேய்த்துவிடுவார். அப்போது ஸ்கிம்மர் கருவி, அந்த கார்டின் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்கிறது. அந்த தகவல்களைக் கொண்டு அதேப்போன்ற போலியான கிரடிட் கார்டை இந்த கும்பல் தயாரித்து அதனைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய்களை சுருட்டியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
எனவே எப்போதும் கிரடிட் கார்டை காசாளரிடம் கொடுத்துவிட்டு அங்கே இங்கே வேடிக்கை பார்க்காமல், நமது கார்டை அவர் எத்தனை முறை எந்த கருவில் தேய்க்கிறார் என்பதை சரி பார்த்து, உடனடியாக அதனை திரும்பப் பெறுவதில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.