சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பாரதிய ஜனதா செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ரமேஷின் நண்பர் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் இதுவரை உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் தொடர்ச்சியாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்களில் இதுவரை ஒரு குற்றவாளி கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்து தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும், தமிழக அரசு ஆடிட்டர் ரமேஷூக்கு உரிய பாதுகாப்பு அளிக்காததாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், இதுவரை எவரையும் காவல்துறை கைது செய்யவில்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த புதன்கிழமை நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், எம். சத்தியநாராணன் ஆகியோர் கொண்ட அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் விசாரணை முடிவடைந்து, வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ரமேஷ் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.