சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இயக்குநர் சேரனின் மகள் தாமினி, தந்தையுடன் செல்ல விரும்புவதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.
காதல் பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறிய சேரனின் மகள் தாமினி, கடந்த இரண்டு வார காலமாக, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
2 வார கால அவகாசம் முடிந்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தனபாலன், சி.டி. செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, யாருடன் செல்ல விரும்புகிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டதற்கு, தந்தையுடன் செல்ல விரும்புவதாக தாமினி கூறினார்.
ஆனால், இதற்கு மனுதாரர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு காதலன் சந்துருவுடன் செல்ல விரும்புவதாகக் கூறிய தாமினி, தற்போது அவர் மீதான நிர்பந்தங்கள் காரணமாகவே தந்தையுடன் செல்ல விரும்புவதாகக் கூறுகிறார். அவரை தந்தையுடன் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று மனு தாரரான சந்துருவின் அக்கா சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சங்கரசுப்பு கூறினார்.
இதனை கேட்ட நீதிபதிகள், இந்த கோரிக்கையை ஒரு மனுவாக தாக்கல் செய்யுமாறு கூறி, மனு மீது பிற்பகல் 1 மணிக்கு விசாரணை நடத்துவதாக உத்தரவிட்டனர்.