அரசு கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதை மருந்துகள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருள்களின் சட்டத்துக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்நதவர் முத்துவேல். இவரது மனைவி எம்.விஜயா. இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக சென்னை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, விஜயாவிடம் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர் மீது சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை, போதை மருந்துகள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருள்களின் சட்டத்துக்கான முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சின்னப்பன் முன்பு விசாரணை ந்டந்தது. இதில், விஜயா கஞ்சா விற்பனை செய்தது நீருபிக்கப்பட்டதால், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி சின்னப்பன் தீர்ப்பளித்தார்.