ரயில்வே காவல்துறையின் ஐ.ஜி.யாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆர். ஆறுமுகம் சென்னையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இவர் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் எழும்பூர் காவல்துறை ஆணையர் அலுவலக சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
உயிரிழந்த ஆர். ஆறுமுகத்துக்கு லதா என்ற மனைவியும் ஆனந்த், கீர்த்தி என்ற மகன்களும் உள்ளனர். உயிரிழந்த முன்னாள் ஐ.ஜி. ஆறுமுகத்தின் உடலுக்கு காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி.க்கள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அவருடைய இறுதிச் சடங்கு அண்ணாநகர் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ரயில்வே காவல்துறையின் ஐ.ஜி.யாக பொறுப்பேற்பதற்கு முன்பு, பொருளாதார குற்றப்பரிவின் ஐ.ஜி.யாக பதவி வகித்துள்ளார். மேலும் இவர் காவல்துறையின் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.