சென்னையில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாப் பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் நேற்று அனுமதி மறுத்திருந்தனர். அதை எதிர்த்து திமுக தரப்பில் இன்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசுத் தரப்பு விளக்கத்தைக் கேட்டது. அப்போது, இந்தப் பாதை கோயம்பேடு சந்தைக்கு செல்லும் முக்கியப் பாதை என்பதால், அங்கே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும், பத்தாயிரம் பேருக்கு மேல் அங்கே திரள்வர் என்று கூறப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாது, என்று போலீஸார் தரப்பில்கூறப்பட்டது.
அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், காவல் துறையின் அனுமதி மறுப்பை ஏற்றுக் கொண்டதுடன், திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
இதனால், இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவிருந்த திமுக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.