திருச்சியில் ஒரு கும்பலுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கைகலப்பால் பதற்றம் ஏற்பட்டது.
திருச்சியில் இன்று காலை 10.30க்கு திருச்சி, பெரம்பலூர், கரூர் பகுதி நாடாளுமன்றத் தொகுதிக்கான கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் திருச்சி வந்துள்ளார். அவர் தலைமையில் நடக்கும் கூட்டத்துக்கான கட்சிக் கொடிகள், வரவேற்பு பேனர்கள் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. இதில், அரிஸ்டோ ஹோட்டல் முன்னுள்ள ரவுண்டனா பகுதியில் கட்டப்பட்டிருந்த கொடிகள், விளம்பரத் தட்டிகளை ஒரு கும்பலைச் சேர்ந்த சுமார் 50 பேர் அடித்து நொறுக்கி, கிழித்து எறிந்தனர். இதனைக் கண்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். சாலையில் முனை வரை துரத்திச் சென்ற அவர்களுக்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனிடையே இந்தக் கும்பலின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கே வந்த ஞானதேசிகன், போலீஸாரிடம் தகவலைச் சொல்லி, அந்த கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, காங்கிரஸ் தொண்டர்களை கூட்டம் நடக்கும் மண்டபத்துக்குச் செல்லுமாறு கூறினார். இதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.