திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள புலிவலம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் செவ்வாய்க்கிழமை மூவர் இறந்தனர்.
திருச்சி, கருமண்டபம், ஆல்பா நகரைச் சேர்ந்தவர் மாதவ கண்ணன் மகன் புருஷோத்தமன் (33). திருச்சியில் கணினி மையம் நடத்தி வந்தார். இவர் புலிவலம் அருகே சத்திரப்பட்டி மேடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே பெரமங்கலம் மணியம்பட்டியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சுரேஷ் (45) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி புருஷோத்தமன் அதே இடத்தில் இறந்தார்.
இந்த விபத்தில் சுரேஷ் மற்றும் இவருடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் ராஜேந்திரன் (45) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தனர்.
இதுகுறித்து புலிவலம் காவல் நிலைய ஆய்வாளர் நடேசன், சார்பு ஆய்வாளர் ஆர். லோகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.