சேலத்தில் ரூ. 50 லட்சம் கேட்டு தனியார் நிறுவன உரிமையாளரைக் கடத்தியதாக 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த 17-ம் தேதி சலூன் கடைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு வந்த செல்போன் அழைப்பில் அவரைக் கடத்தியுள்ளதாகவும், ரூ. 50 லட்சம் பணம் கொடுத்துவிட்டு மீட்டுச் செல்லுமாறு மர்ம நபர்கள் கூறினார்களாம்.
இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ராஜ்குமார் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீஸாரின் விசாரணையில், சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ராஜ்குமார் மர்ம நபர்களால் கடத்தி வைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமாரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மீட்ட போலீஸார், கடத்தல் தொடர்பாக சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்த ஏ.கோபிநாத் (32), எம்.பிரதீப் (24) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ள 8-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட ராஜ்குமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிசினஸ் சொலியூசன் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக செயல்பட்டு வந்தார். இந்நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலிக்கப்பட்டது. ஆனால், பணத்தை திருப்பிப் தரவில்லை என பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து ராஜ்குமார் உள்ளிட்டோர் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.