ஆத்தூர் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். குடும்பத்துடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற சுந்தர்ராஜன் கார் மூலம் சனிக்கிழமை நள்ளிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை சுந்தர்ராஜின் உறவினர் சேட்டு (34) ஓட்டினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பமசமுத்திரம் பகுதியில் இவர்களது கார் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் சென்ற போது, சென்னையில் இருந்து சேலத்திற்கு பாரம் ஏற்றிய கொண்டு வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், கார் ஓட்டுநர் சேட்டு (34). சுந்தர்ராஜின் மகன் சௌந்தரராஜ் (15) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த
சுந்தர்ராஜின் மனைவி, 2 மகன்கள், கார் ஓட்டுநர் சேட்டுவின் மனைவி ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.