சேலத்தில், பெண்ணை பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே சாலை ஓரத்தில் ரத்தப் போக்குடன் சுமார் 30 வயதுடைய பெண் கடந்த 19-ம் தேதி மயங்கிக் கிடந்தார். இதையடுத்து, அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சேலம் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் சண்முகா நகரைச் சேர்ந்த லலிதா (31) என்பதும் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.
கடந்த 19-ம் தேதி சேலத்திற்கு வந்த போது காந்தி மைதானம் அருகே ஒரு இளைஞர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அதனால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அஸ்தம்பட்டி போலீஸார், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த திருமுருகன் (26) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு சேலம் அரசு பொது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.