சேலத்தில் 14-வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 14 வயது மகள். 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் வெங்கடாசலத்தின் மகன் சண்முகம் (39). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், வீட்டில் இருந்து கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக நேற்று(திங்கள்கிழமை) பகலில் சென்ற அச்சிறுமியை கடத்திய ஆட்டோ ஓட்டுநர் சண்முகம், அதே பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட அச்சிறுமி வீட்டிற்கு சென்று நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஜகீராபானு, பாதிக்கப்பட்ட சிறுமியை சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.பரிசோதனையில், அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் சண்முகத்தை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர். அவர் மீது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.