சேலத்தில் போலீஸ் அதிகாரி வீட்டுக்கு அசுத்தமான குடிநீர்வினியோகம் செய்த போலி குடிநீர் தொழிற்சாலைக்கு சீல்

சேலம் நெத்திமேடு பகுதியில் இயங்கிய போலி மினரல் வாட்டர் தொழிற்சாலைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீட்டுக்கு புழுக்களுடன் கூடிய அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சேலம் நெத்திமேடு பகுதியில் இயங்கிய போலி மினரல் வாட்டர் தொழிற்சாலைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீட்டுக்கு புழுக்களுடன் கூடிய அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் சரோஜ்குமார் தாகூர். அன்னதானப்பட்டியில் உள்ள இவரது வீட்டுக்கு நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு குடிநீர் தொழிற்சாலையில் இருந்து 20 லிட்டர் கேனில் வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீரில் புழுக்கள் நெளிந்ததுடன் அசுத்தமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

 இது குறித்து சரோஜ்குமார் தாகூரின் வீட்டில் பணியாற்றும் முதல் நிலைக் காவலர் ஏ.சுரேஷ், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தி.அனுராதாவிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

 விசாரணையில் அந்த தொழிற்சாலை உரிமம் பெறாமலும், போலியான முத்திரைகளை பயன்படுத்தியும் செயல்பட்டு வருவது தெரிய வந்ததை அடுத்து, அதற்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த தீபக் (28) என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

 இது குறிóத்து டாக்டர் அனுராதா கூறியது:

காவல் அதிகாரி சரோஜ்குமார் தாகூர் வீட்டில் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது குறித்து புகார் கிடைத்ததன் அடிப்படையில் நெத்திமேடு பகுதியில் செயல்பட்டு வந்த போலி தொழிற்சாலை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்காக ஏற்கெனவே உரிமம் கோரி பெறப்பட்ட விண்ணப்பத்தை நாங்கள் நிராகரித்திருந்த நிலையில் தீபக் போலியான முத்திரைகளுடன் ஆலையை இயக்கி வந்துள்ளார்.

 சேலம் மாவட்டத்தில் மொத்தம் 32 குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 9 தொழிற்சாலைகளுக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெறப்படவில்லை. இதையடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றையும் மூட விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com