விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி வெங்கட்ராமன், படத்தைப் பார்வையிட்டு, தமிழக அரசின் தடையை விலக்கினார். இந்நிலையில் இன்று தமிழக அரசு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தது.
இன்று மதியத்துக்கு மேல் இந்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எலிபி தர்மராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் முடிவில், நேற்று விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை விலக்கி, தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் இருவரும் தீர்ப்பு கூறினர்.
இதனால், விஸ்வரூபம் படத்தின் மீதான தடை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.