உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் வெள்ளியன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக சதாசிவம் பதவியேற்றுள்ளார். 64 வயதாகும் சதாசிவம், ஏப்ரல் 26, 2014 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து பின்னர் சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர் சதாசிவம். அரசு வழக்குரைஞர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி என்று படிப்படியாக ஏற்றம் பெற்று இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார் அவர்.