மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எரிபொருள்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசினார்.
"டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றின் விலைகளை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தினசரி உயர்த்திக் கொண்டே போகிறது. யார் சொல்வதையும் கேட்காமல் அவர்களுக்குத் தோன்றியதை செய்து கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களின் நிதியை மத்திய அரசு பறித்துக் கொண்டு போகிறது. மேற்கு வங்கம் ரூ.21 ஆயிரம் கோடி வருவாயை திரட்டுகிறது. ஆனால் நாம் வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும் தொகையோ ரூ. 26 ஆயிரம் கோடி. கடந்த இடதுசாரி அரசின்போது, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 11 நாள் பணிதான் நடைபெற்றது. அதனை 40 நாளாக அதிகரித்துள்ளோம். ஆனால் மத்திய அரசு அதற்கான நிதி தருவதை நிறுத்திவிட்டது” என்று மம்தா மத்திய அரசைக் குறை கூறினார்.