கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கோடி அர்ச்சனை வழிபாடு முறையாக நடைபெறுவதாக திருக்கோயில்களின் இணை ஆணையர் இரா. ஞானசேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முறையாக அனுமதி பெற்று 16.11.2009 முதல் கோடி அர்ச்சனை வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோடி அர்ச்சனை வழிபாட்டை நடத்தக்கூடாது என்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
கன்னியாகுமரி பக்தர்கள் சங்கம் என்பது அங்கீகரிக்கப்படாத சங்கமாகும். கன்னியாகுமரி கோயிலை பயன்படுத்தி பணம் வசூல் செய்வதை தடை செய்ததால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடி அர்ச்சனை பெயரில் பணம் பறிப்பு என்ற உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டுள்ளனர். கோடி அர்ச்சனைக்கு முறையாக இலாகா முத்திரை வைக்கப்பட்ட அர்ச்சனை சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 1422 பசலியில் ரூ. 72,17,630-ம் 1423 பசலியில் ரூ. 73,38,580ம் வரவு வரப்பெற்றுள்ளது. இதனை அறநிலையத்துறை தணிக்கையாளர்கள் தணிக்கையும் செய்துள்ளனர்.
கோடி அர்ச்சனை ரசீது பெறும் பக்தர்களுக்கு கோயில் அர்ச்சகர்களை கொண்டு முறையாக அர்ச்சனை நடத்தப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் நிர்வாகம் எந்த அமைப்புக்கும், பக்தர்கள் சங்கத்துக்கும் அங்கீகாரம் எதுவும் வழங்க வில்லை. எனவே கோயிலுக்கு நன்கொடையோ, காணிக்கையோ செலுத்த விரும்பும் பக்தர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி முறையான ரசீது பெற்றுக் கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.