தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற உயிரிழந்ததை அடுத்து, அந்த மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பேகம்பூர் அசனத்புரம் பகுதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி சம்சத்பேகம்(45). உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவரை, மேட்டுப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உசேன் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த மருத்துவர், சம்சத்பேகத்துக்கு சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய சம்சத் பேகம், சிறிது நேரத்தில் மயக்கமடைந்து, உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் உடலை ஏற்றி, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால், அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே, பிரச்னைக்குள்ளான தனியார் மருத்துவமனையில், போலி மருத்துவர் பணியாற்றி வருவதாக பேகம்பூர், நத்தர்ஷா தெருவைச் சேர்ந்த மு.யாசர் அராபத், திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முறையான மருத்துவப்படிப்பு இல்லாமலும், மருத்துவ பயிற்சியின்றியும், திருச்சி மாவட்டம், பிச்சாண்டிகோயில் பகுதியைச் சேர்ந்த க.கிருஷ்ணசாமி(57) மருத்துவராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். அவரிடம், சிகிச்சைப் பெற்றதில், தனக்கு உடல்நலக்குறைவு அதிகமானதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில், கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை வியாழக்கிழமை மாலை கைது செய்தனர்.
மேட்டுப்பட்டி தேவாலயத்திற்கு சொந்தமான அந்த மருத்துவமனை, கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதில், கடந்த 7 ஆண்டுகளாக கிருஷ்ணசாமி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.