திண்டுக்கல் அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலியாயினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆ.வேங்கடாசலம் (37), அவரது மனைவி தீபா (35), மகன் பாலாஜி, வேங்கடாசலத்தின் அக்கா சாந்தி (42), அவரது பெரியப்பா மகள் பானு (46), கார் ஓட்டுநர் ம.மோகன் (35). கொடைக்கானலில் பண்ணைக்காடு பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் வேங்கடாசலத்தின் மூத்த மகன் ஸ்ரீராமைப் பார்ப்பதற்காக இவர்கள் 6 பேரும் இன்று காலை சொந்த ஊரில் இருந்து கொடைக்கானல் நோக்கி ஒரு காரில் சென்றனர்.
திண்டுக்கல் வடமதுரை தாமரைப்பாடி பகுதியில் கார் வந்தபோது, நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்தனர்.
தீயணைப்புத் துறையினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த வடமதுரை போலீஸார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.