நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள புகழ்பெற்ற எருக்கட்டஞ்சேரி ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ கால காலநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் எமனுக்கு உயிர் அளித்த தலமாகும்.மார்கண்டேயர் உயிரை காப்பாற்ற திருக்கடையூரில் இறைவன் எமனை சம்ஹாரம் செய்தார்.அதில் எமனின் தலை திருக்கடையூர் அருகே உள்ள எருக்கட்டாஞ்சேரியில் விழுந்தது.எமன் சம்ஹாரம் செய்யப்பட்டதால் பூமியில் மரணம் இல்லை.இதனால் பூமாதேவியின் வேண்டுதலை ஏற்று இறைவன் எமனை உயிர்ப்பித்து எழுப்பி விட்டதால் இத்தலம் எழுப்பிவிட்டாஞ்சேரி என அழைக்கப்பட்டது.பின்னர் மருவி எருக்கட்டாஞ்சேரியானது .
சிதிலமடைந்த நிலையிலிருந்த இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.புதன்கிழமை காலை நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.தொடர்ந்து காலை 9.40 மணிக்கு கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை இந்துசமய அறநிலைய துறை இணை ஆணையர் ஜெகந்நாதன்,ஆய்வர் சுதா,கோயில் நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் பொறையாறு,திருக்கடையூர்,தரங்கம்பாடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.