போடியில் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.
போடி சுப்புராஜ் நகரில் சேனாதிபதி என்பவர் கட்டிவரும் கட்டடத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேனி குழந்தைகள் உதவி மைய தொலைபேசி எண் 1098-க்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் கார்த்திக், சந்திரா ஆகியோர் அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்தினர்.
இதில் தொலைபேசி தகவல் உண்மை என்பது உறுதியானதையடுத்து இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சகாதேவன், சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மர் ஆகியோர் உதவியுடன் சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அங்கு கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தங்கபாண்டியன்-ஜெயந்தி தம்பதியரின் 9 வயது மற்றும் 11 வயது குழந்தைகள், ரமேஷ்-லட்சுமி தம்பதியரின் 13 வயது குழந்தை ஆகிய 3 குழந்தைகளை மீட்டனர்.
மீட்ட குழந்தைகளை தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ஸ்டெல்லா இப்ராஹிம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கட்டட உரிமையாளர், குழந்தைகள், குழந்தைகளின் பெற்றோர் ஆகியோரை செவ்வாய் கிழமை (ஏப். 21) விசாரிக்க முடிவு செய்யப்பட்டு இவர்களை தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தில் ஆஜராக உத்திரவிடப்பட்டது.
இதுகுறித்து தேனி சைல்டு லைன் இயக்குநர் முகமது சேக் இப்ராஹிம் திங்கள் கிழமை கூறுகையில், குழந்தைகளுக்கான பிரச்சனைகள் குறித்து 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளோ தகவல் தெரிந்தவர்களோ இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். போடியில் மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.