நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சிக்குள்பட்ட ஆயப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஆயப்பாடி நூரியா தெருவில் வசித்து வருபவர் ரிஸ்வானா பர்வீன்.இவரது கணவர் கமருதீன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.தினமும் இரவு நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு ரிஸ்வானா பர்வீன் தனது குழந்தையுடன் எதிரில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு தூங்க சென்றுவிடுவாராம்.
திருக்களாச்சேரி ஊராட்சி தலைவர் எம்.அப்துல் மாலிக்கின் சகோதரர் முகம்மது ரபீக் என்பவர் அதே தெருவில் வசித்து வருகிறார்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது வீட்டின் வெளிப்புற கதவின் தாழ்ப்பாளை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.வீட்டில் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தவர்கள் தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு அறையின் கதவை உடைக்க முற்பட்டபோது சத்தம் கேட்டு அந்த அறையினுள் தூங்கிக்கொண்டிருந்த முகம்மது ரபீக்,அவரது மனைவி ஆகியோர் கூச்சல் போட்டுள்ளனர்.அதனால் மர்ம நபர்கள் வீட்டின் வெளிப்புறத்திலிருந்த தோட்டத்தின் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் அப்பகுதியில் தேடிப்பார்த்தபோது தோட்டத்தில் இரண்டு சூட் கேஸ்கள் திறந்து கிடந்துள்ளன.அதில் ரிஸ்வானா குடும்பத்தினர் மற்றும் அவரது வீட்டின் புகைப்படங்கள் இருந்துள்ளன.
சந்தேகமடைந்த அப்பகுதியினர் உடனடியாக ரிஸ்வான வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருப்பதும் உள்ளிருந்த பீரோக்கள் திறக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள்,ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த சீர்காழி டிஎஸ்பி வெங்கடேசன்,பொறையாறு காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.மேலும் நாகப்பட்டினத்திருந்து வரவழைக்கப்பட் லெசி என்ற போலீஸ் மோப்ப நாயின் உதவியுடன் திருட்டு நடந்த வீட்டிலும்,தெருவிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.