திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்வாடி 4-வது தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் காஜாமுகைதீன் (22). ஆட்டோ ஓட்டுநர். திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் இவரை அணுகி, ஏர்வாடியில் இருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் உள்ள காந்திநகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கூறினராம். இந்நிலையில், காந்திநகர் குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் காஜாமுகைதீன் இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பதற்றம் :
ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டதை அறிந்த ஏர்வாடி பகுதி மக்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன், நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் ஏர்வாடி பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு கொலையாளிகளை கைது செய்யக்கோரி ஏர்வாடியில் திரளான இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இது தொடர்பாக ஏர்வாடி, திருக்குறுங்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.