போடியில் தொடர் மழையினால் 6 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளிச் சிறுவன் பலத்த காயமடைந்தார்.
போடியில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் போடி நகர் புதூரில் அப்துல் ரசீது மனைவி ரசூல் பீவி, பாண்டி மனைவி பழனியம்மாள், காந்தி மனைவி பொன்னுத்தாய் ஆகியோரின் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இதில் வியாழக்கிழமை காலை காந்தி மனைவி பொன்னுத்தாய் என்பவரின் வீட்டு சுவர் பின்புறமாக விழுந்தது. அப்போது கடைக்கு சென்றுவிட்டு வந்த பாலமுருகன் மகன் பிரவீன்குமார் என்ற லெனின்குமார் (10) என்ற 5-ம் வகுப்பு சிறுவனின் மீது சுவர் விழுந்தது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோல் போடி மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வீடும், விசுவாசபுரம் கிராமத்தில் முத்தையன் என்பவரின் வீடும், போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டொம்பையன் என்பவரின் வீடும் இடிந்து விழுந்து சேதமடைந்தது.சேதமடைந்த வீடுகளை போடி வட்டாட்சியர் குணசேகரன் தலைமையில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே தொடர் மழையினால் போடி கொட்டகுடி ஆற்றில் குரங்கனி பகுதியிலிருந்து போடிக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாக காணப்படுகிறது. மேலும் கொட்டகுடி ஆற்று நீரை கரையோர மக்கள், ஊராட்சி நிர்வாகங்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றன. கொட்டகுடி ஆற்று நீர் மாசடைந்து செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.