சென்னை,
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
முதல்வர் ஜெயலலிதா ஒரு வாரத்துக்கும் மேலாக காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாட்டுக்காகச் சிகிச்சை பெற்று வருவதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் செய்திகள் வருகின்றன.
ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. அதிமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட அவரைக் கண்டு பேசியதாகச் செய்திகள் வரவில்லை.
இந்த நேரத்தில், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்புகின்றனர். அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலாவது தமிழக அரசின் சார்பில் முதல்வரின் உடல் நிலை குறித்து, தக்க ஆதாரங்களுடன் செய்தியாளர்கள் வாயிலாக நல்ல தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனக்கும் இடையே கொள்கை அளவில் வேறுபாடுகள் இருந்தாலும், அவர் விரைவில் முழு நலம் பெற்று, எப்போதும் போலத் தனது பணிகளைத் தொடர்ந்திட வேண்டும் என்பதுதான் என் உளப்பூர்வமான விருப்பமாகும்.
எனவே, வதந்திகளை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசின் நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றும், அதற்கேற்ற ஏற்பாடுகளைத் தமிழக ஆளுநர் கையிலெடுக்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.