புது தில்லி
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தாம் பேசினால் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது. அவ்வாறு விவாதம் நடந்தால் மட்டுமே, அந்த நடவடிக்கைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள் வெளிவரும். ஆனால், இந்த விவாதத்தில் பங்கேற்க பாஜக அஞ்சுகிறது.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாடெங்கிலும் பிரதமர் மோடி பேசுகிறார். அதேசமயத்தில், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அவர் பயப்படுகிறார். அவரது அச்சத்துக்கு காரணம் என்ன?
சுதந்திர இந்திய வரலாற்றிலேயே பெரிய ஊழல் ஒன்று இருக்குமேயானால், அது ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நடவடிக்கையாகதான் இருக்கும். நரேந்திர மோடி தனியொரு மனிதராக கனகச்சிதமாக இந்த ஊழலை செய்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றால், இந்த விவகாரம் குறித்து அனைத்து உண்மைகளையும் வெளியிடுவேன். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பயனடைந்தது யார்? யாருடைய நன்மைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? என அனைத்து உண்மைகளையும் நான் சொல்வேன். அதன் காரணமாகவே, நாடாளுமன்றத்தில் நான் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் என்றைக்கு நான் பேசுகிறேனோ, அன்றைய தினம் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்றார் ராகுல் காந்தி.