மங்களூரு,
காவிரி பிரச்னை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் பகுதியில் ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைப்பதற்காக முதல்வர் சித்தராமையா விமானம் மூலம் நேற்று மங்களூருவுக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது: -
கர்நாடக அணைகளில் உள்ள நீரின் இருப்பு, நீர்வரத்து மற்றும் மாநிலங்களுக்கான தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவினர்கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து, ஆகியவற்றை ஆய்வு செய்து சென்று உள்ளனர். மேலும் குடிநீருக்காக தண்ணீரை கர்நாடகம் எப்படி பயன்படுத்தி வருகிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதேப் போல் தமிழகத்திலும் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்கிறார்கள். வருகிற 18–ந் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அந்த சமயத்தில் உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
மேலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தார்வார், பாகல்கோட்டை, கதக், பெலகாவி ஆகிய 4 மாவட்டங்களில் நடந்து வரும் மகதாயி நதிநீர் பிரச்சினை பற்றி ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். மேலும் அவருக்கு கடிதமும் எழுதி அனுப்பி உள்ளேன். மேலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க மும்பையில் வருகிற 21–ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் 4 மாநில முதல்வர்கள் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வருடன் நான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்று அவர் கூறினார்.