வெள்ளக்கோவில்
தங்களுக்குப் பணம் தராமல் ஏமாற்றுவதாக மூலனூர் கறிக்கோழி (பிராய்லர்) நிறுவனத்தை இன்று முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
மூலனூர் நத்தப்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கறிக்கோழி மற்றும் கோழித் தீவன உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட பண்ணையாளர்களிடம் பிராய்லர் கோழிக் குஞ்சுகளைக் கொடுத்து கறிக்கோழி உற்பத்தி செய்து, உள்ளூர், கேரள மாநிலத்தில் விற்பனை செய்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாகப் பண்ணையாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒப்பந்தத் தொகையைச் சரிவரக் கொடுக்கவில்லை.
இவ்வாறு தனிநபர்கள் கடனாக மொத்தம் ரூ.60 கோடி பாக்கி நிலுவையில் உள்ளது. கோழித் தீவன உற்பத்தி ஆலைக்கு மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருள்கள் விற்பனை செய்த விவசாயிகள், முகவர்கள், வியாபாரிகளுக்கும் பாக்கி கொடுக்க வேண்டியுள்ளது.
நிறுவன உரிமையாளர் வி.பி.பெரியசாமியிடம் பலமுறை கேட்டும் பணத்தைத் தராமல் இழுத்தடித்து வருகிறார். தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக மிரட்டி வருகிறார். மொத்தம் 270 பேர் இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.