சென்னை: தமிழத்தின் முதல்வர் பழனிசாமியா? அல்லது ஆளுநரா? என டிடிவி தினகரன் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பது:
ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து காப்பாற்றுவதில், தமிழக அரசு மெத்தனம் காட்டுவதால்தான், இரவிலும் ஆயிரக் கணக்கான மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையிலேயே தெளிவில்லாத நிலையில் உள்ள தமிழக அரசின் நிலை மிகுந்த வேதனையளிக்கிறது. மீனவர்களின் பிரச்னையை தலையாய பணியாகக் கருதி, அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில முதல்வர் நேரில் சென்று, போராடும் மீனவ மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக, மாநில ஆளுநர் சென்று மீனவர்களை சந்திக்கிறார். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா?
மீனவ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்காத காரணத்தால்தான் மீனவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நடந்த துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்பதால், உடனடியாக குமரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னேன். மீனவர்களின் இந்த துயரம் தீரும்வரை அவர்களது உணர்வுகளோடு நான் எப்போதும் கலந்திருப்பேன் என்று கூறியுள்ளார்.