தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
குறிப்பாக, மருத்துவ பொது நுழைவுத் தேர்விலிருந்து ("நீட்') தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், " ஜல்லிக்கட்டு சிறப்பான முறையில் நடைபெற உதவி புரிந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.வர்தா புயல் நிவாரண தொககையான 27 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.மீனவர்களின் சிறப்பு திட்டத்திற்காக 1650 கோடி நிதி ஒதுக்க வேண்டும். வறட்சி நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும்.
அவினாசி -அத்திகடவு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஓதுக்க வேண்டும். தேனியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வைத்துள்ளேன்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வருடன் நிதித்துறை செயலாளர், சண்முகம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சென்றிருந்தனர்.