கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது கானஞ்சாவடி கிராமம். இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை காலை 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் தீக் காயத்துடன் அவதிப்பட்டார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அவரை 4 பேர் காரில் ஏற்றி கடத்திச் சென்று, முந்திரிக் காட்டில் அவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியதாக அப்பெண் தெரிவித்தார். சம்பவத்துக்கான காரணம், அதில் தொடர்புடையோர் குறித்து காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததால் பண்ருட்டி காவல் ஆய்வாளர் ஆராக்கியராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எஸ். கொளத்தூர் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த வரதராஜன் மகள் சுருதி(19) என்பது தெரிவயவந்தது. இவருக்கும், கிருஷ்ணகிரி தெம்பமுத்தூரை சேர்ந்த சின்னசாமி மகன் நாராயணசாமி(25) என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் காதலாக மாறி இருவரும் செல்லிடப்பேசியில் தினமும் பேசியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய சுருதி, நாராயணசாமியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார். பிறகு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நாராயணசாமியை வற்புறுத்தியிருக்கிறார் சுருதி. ஆனால் நாராயணசாமி ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் சுருதியை திருமணம் செய்ய மறுத்ததோடு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமுற்ற சுருதி, நாராயணசாமியை மிரட்ட தன்னிடம் இருந்த டீசலை உடலில் உற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் அவரை தீக்காயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பகாக நாராயணசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்தனர்.