புதுச்சேரி: வில்லியனூர் பகுதியில் உள்ள பல்வேறு மதுக்கடைகளை அகற்றுமாறு வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள கலால் துறை அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்த தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 164 கடைகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க கலால் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் கடைகள் திறக்கப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஏற்கெனவே பல இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதே போல் வில்லியனூர் பகுதியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதைக் கண்டித்து கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக அறிவித்திருந்தது. அதன்படி புதுவை மாநில விசிக முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் கலால்துறை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட விசிக தொண்டர்கள் கலால்துறை அலுவலகத்தில் திரண்டனர்.
கலால் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த போலீஸார் அவர்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். பின்னர் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் நிர்வாகிகள் அமுதவன், தமிழ்வளவன், எழில்மாறன், ரவி, தமிழ்மாறன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.