இஸ்லாமாபாத்: மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார் குல்பூஷன் ஜாதவ். கைது செய்யப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.
இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இருப்பினும் இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜாதவ் மேல்முறையீடு செய்திருந்தார். இதை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அவர் தனது கருணை மனுவை பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு கொடுத்துள்ளார்.