திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட தங்க கொடி மரம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 5 பேர் பிடிபட்டு உள்ளனர்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடு பதிக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட கொடி மரத்தில் சேதம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது தங்க கொடி மரத்தை 5 பேர் சேதப்படுத்துவது போன்ற காட்சி பதிவாகி இருந்ததை அவர்கள் கண்டனர்.
இதைத் தொடர்ந்து கொடி மரத்தை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒரு முதியவர் உள்பட 5 பேரை கோவில் நிர்வாகத்தினர் பிடித்து வைத்துக் கொண்டனர். பின்னர் ஐந்து பேரும் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.