திருக்கோவிலூர் அருகே அரங்கண்டநல்லூரில் பல்லவ சோழ பாண்டிய காலத்தில் கட்டப்பட்டு, மலைமான் திருமுடிகாரி காலத்தில் நிறைவு பெற்ற சௌந்தரிய கணகாம்பிகை சமேத அதுல்யநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
திருக்கோவிலுர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன், பரவலாக மழை பெய்தது. அப்போது, கோயில் ராஜகோபுரத்தின் மேல் யாளி மேல்பாகத்தில் இடி விழுந்துள்ளது. இதனால், கோபுரம் தாங்கி பொம்மை வரை சுமார் 10 அடி அகலத்துக்கு 5 அங்குலம் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து யாளி முகத்துப் பொம்மை அம்மன் கோயில் மண்டபத்தின் மீது விழுந்து முகப்பு அம்மன் சிலைக்கு அருகே உள்ள சாமரத்தின் சிலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது..
இந்தக் கோயில் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி நடத்தப்பட்டது. ஆகம முறைப்படி பாலாலயம் செய்து இந்தத் திருக்கோயிலை முற்றிலுமாக சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அரசு முன் வர வேண்டும் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கோபுர கலசம் மற்றும் கொடிமரம் பேராபத்துக்கு உள்பட்டதால் நாட்டை ஆள்பவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் பெரும் தீங்கு ஏற்படும் என்று ஆண்மிக அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.