மலேசியாவில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் வெப் டிவியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், 25 ஆவது மாவட்டமாக தூத்துக்குடி கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின்போது, எம்ஜிஆரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 380.94 கோடி மதிப்பிலான 214 திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் ரூ. 8.08 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். மலேசியாவில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் வெப் டிவியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.