வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கணவன், மனைவி, மகன் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் சண்முகம் (42). ஃபேன்சி ஸ்டோர் உரிமையாளர். இவருடைய மனைவி மரகதம் (40). மகன் அபிலேஷ் (12). இவர்கள் மூன்று பேரும் உறவினர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக திருப்பூருக்கு ஆம்னி வேனில் வந்து கொண்டிருந்தனர்.
வெள்ளக்கோவில் முன்புறமுள்ள குருக்கத்தி அருகே தேசிய நெடுஞ்சாலை வளைவில் முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியது.
இதில் ஆம்னி வேனை ஓட்டி வந்த சண்முகம், அமர்ந்திருந்த மரகதம், அபிலேஷ் மூன்று பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பேருந்தில் வந்தவர்களுக்குப் பாதிப்பில்லை. ஆம்னி வேன் முற்றிலும் நொருங்கிப் போனது. வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.