புதுதில்லி: நகரங்களில் ஏற்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் கிராமப்புற பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுதில்லியில் சமூக சீர்திருத்தவாதி நானாஜி தேஸ்முக்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, சமூகநல தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் 115–வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்..
நம் நாட்டின் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது சாதி பாகுபாடு தான். இது தான் விஷமாக பரவி கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இதனை களைந்து ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சியை மேம்பாடு அடைய செய்வது தற்போது மிகவும் அவசியம் ஆகும்.
கிராம முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரங்களில் ஏற்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் கிராமப்புற பகுதிகளையும் சென்றடைய வேண்டும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார்.