மும்பை: மும்பையில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் இயங்கி வந்த உணவு விடுதியில் நேரிட்ட தீ விபத்து தொடர்பாக, அந்த விடுதியின் மேலாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள ஒரு வணிக வளாகக் கட்டடத்தின் மொட்டை மாடியில் "ஒன் அபோவ்' என்ற பெயரில் இயங்கி வந்த உணவு விடுதியில், வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், 3வது தளத்தில் இருந்த 11 பெண்கள், 3 ஆண்கள் என 14 பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. விடுதியில் பிறந்த நாளைக் கொண்டாடிய குஷ்பு பன்சாலி என்ற பெண்ணும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தொடர்பாக, "ஒன் அபோவ்' விடுதியின் உரிமையாளர்களுக்கு எதிராகவும், அருகில் உள்ள "மோஜோஸ்' என்ற உணவு விடுதி உரிமையாளர்களுக்கு எதிராகவும் போலீஸார் தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.
அதையடுத்து, தீ விபத்துக்கான காரணம் கேட்டு, "ஒன் அபோவ்' உணவு விடுதியின் உரிமையாளர்களான ஹிரதேஷ் சங்வி, ஜிகார் சங்கி ஆகியோருக்கு காவல் துறை சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
அந்த விடுதி உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதால், அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், "ஒன் அபோவ்' விடுதியின் மேலாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, விடுதியின் உரிமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, அவர்களது உறவினர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.