ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் விதவையான தாய்க்கு மகள் வரன் தேடி மறுமணம் செய்து வைத்த அழகு பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கீதா குப்தா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் முகேஷ் குப்தா கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கீதா குப்தா மிகவும் மனமுடைந்தார். இவர்களின் மகள் சன்கித்தா பணிக்காக குருகிராம் நகருக்கு இடம்பெயர்ந்தார். இது கீதாவிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சன்கித்தா வாரந்தோறும் தனது தாயை சென்று பார்த்து வந்தார். இருப்பினும் அவர் தனிமையில் வாடிவருவதை உணர்ந்த சன்கித்தா 53 வயதான தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க ஆகஸ்ட் மாதம் முடிவு செய்தார்.
குழந்தைகள் உடனிருந்தாலும் வாழ்க்கைத்துணை மிகவும் அவசியம் என்பதால் கீதாவிற்கு மேட்ரிமோனியில் வரன் தேட தொடங்கினார். அவருக்கு பல வரன்கள் வந்தன. இந்தநிலையில் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த கே.ஜி.குப்தாவின்(55) மனைவி புற்றுநோய் பாதிப்பால் 2010-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் வாழ்ந்து வந்தார் குப்தா.
இது குறித்து செப்டம்பர் மாதம் தனது தாயிடம் சன்கித்தா கூறியது போது அவர் ஆட்சேபம் தெரிவித்தார். கீதாவின் உறவினர்களும் மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பல தடைகளை மீறி சன்கித்தா கீதாவிற்கு நல்ல வரனை தேர்ந்தெடுத்தார்.
நவம்பரில் கீதா கருப்பை அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டார். அறுவை சிகிச்சையைப் பற்றி அறிந்த போது, குப்தா ஜெய்ப்பூர் வந்தார். மூன்று நாட்களுக்கு அவருடன் இருந்தார்.
இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய வருவாய்த்துறை ஆய்வாளர் கே.ஜி.குப்தாவிற்கும் தனது தாய் கீதாவுக்கும் திருமணம் நடத்தி வைத்தார்.
திருமணத்திற்கு பிறகு தனது தாய் கீதா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சன்கித்தா கூறினார்.
சமூகத்தில் விதவைகள் மறுமணம் செய்வதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பும். அதையும் மீறி தனது விதவை தாய்க்கு மறுமணம் செய்து வைத்த சன்கித்தாவிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.