காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக டெல்டா பகுதிகளின் விவசாயிகளுக்கு வேளாண்மைக்காக கூடுதலாக சுமார் 7 டி.எம்.சி. தண்ணீரை திறக்கக்கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, கர்நாடக மாநிலத்தில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று கூறினார். காவிரி நீர் பங்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணைக்கு வருவதாக குறிப்பிட்ட அவர், அதில் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவோம் எனக் கூறினார்.
மேலும், கர்நாடகத்தில் உள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கேஆர்எஸ் ஆகிய அணைகளில், தற்போது 40 டிஎம்சி அளவுக்கு குறைவாகவே தண்ணீர் இருப்பதாக சித்தராமையா சுட்டிக்காட்டினார். இந்த தண்ணீர் இருப்பு கர்நாடகத்தின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என்றும் சித்தராமையா குறிப்பிட்டார்.