சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதியை ஒட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று மாலை 6.30 மணிக்கு சரண கோஷம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதியை ஒட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று மாலை 6.30 மணிக்கு சரண கோஷம் முழங்க மகர ஜோதியை தரிசனம் செய்தனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தை முதல் தேதி சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் மலை முகட்டில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பான் என்பது ஐதீகம். இதை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். 

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். இன்று காலை மகர சங்கரம பூஜை நடைபெற்றது. மகர விளக்கு பூஜை அன்று ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த திருவாபரணம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து நேற்று முன்தினம் மதியம் ஊர்வலமாக புறப்பட்டது. மாலை 6.15 மணிக்கு பின் திருவாபரண ஊர்வலம் சபரிமலை சன்னிதானத்தை அடைந்தது. இதன் பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் தான் மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். சரண கோஷம் முழங்க மகர ஜோதியை கண்டு பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர். 

வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படி பூஜைகள் நடக்க உள்ளன. இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.

பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பம்பை, சபரிமலை, எருமேலி, நிலக்கல் உள்பட பக்தர்கள் குவியும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com