திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே விவசாயி ஒருவருக்கு பயிர்காப்பீட்டு தொகையாக ரூ.5-க்கு காசோலை வழங்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, மத்திய அரசு தேசிய பயிர்காப்பீடு திட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து விவசாயிகள் பயிர்காப்பீடு செய்திருந்ததால் காப்பீட்டு தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் ரூ.610 முதல் ரூ.2000 வரை பயிர்காப்பீடு செய்தனர். இயற்கை பேரிடர் மற்றும் வறட்சியின் காரணமாக நஷ்டமடைந்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை காப்பீட்டுத்தொகையாக வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், மழை இல்லாததால் கருகி போன மக்காச்சோளம், தட்டப்பயிறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை செய்த விவசாயிகளுக்கு, போடுவார்பட்டி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இதற்கான காசோலை வழங்கப்பட்டது.
வங்கியில் வழங்கப்பட்ட அந்த காசோலையில் பயிர்காப்பீட்டு தொகையாக பெரும்பாலான விவசாயிகளுக்கு ரூ.5, ரூ.10, ரூ.3, ரூ.2 என குறைந்த தொகையாக வழங்கப்பட்டுள்ளது விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் காசோலையை மாற்றுவதற்கான செலவே ரூ.150 வரை ஆகும் நிலையில், காப்பீட்டு தொகையாக ரூ.5-க்கு காசோலை கொடுக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளை இதைவிட வேறு எந்தவிதத்திலும் அவமானம் செய்ய முடியாது என விவசாயிகள் தங்களின் மன வேதனையை தெரிவித்தனர்.