ராஜீவ் காந்தி கொலை வழத்தில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று நோய் பாதிப்பு காரணமாக இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பேரறிவாளனுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். அதனால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென பேரறிவாளன் மனு அளித்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஏடிஜிபி அலுவலகம், அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதனடிப்படையில், வேலூர் மத்திய சிறையில் இருந்த பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி புதன்கிழமை சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதையடுத்து தொடர்ந்து அவருக்கு சிறுநீரகத் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் சிறுநீரகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.