தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாஜக சார்பில் விழுப்புரத்தில் நடைபெறும் சம தர்ம எழுச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடலூர் வந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடந்துவருகின்றன. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தேன். ஆனால், பயங்கரவாதிகளை அடக்க தமிழக அரசு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால், துப்பாக்கிசூடு நடத்தவேண்டிய நிலை வந்திருக்காது. திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையினை கொண்டு வந்து துரோகம் செய்தது திமுகதான். மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசுதான் அதற்கு அனுமதி கொடுத்தது. ஆனால், இப்போது அவர்கள் ஒன்றுமே தெரியாதது போல போராடுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறினார்.
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆளுநரால் அங்கு செல்ல முடியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆளுநரும் ஒன்றாகிவிட முடியாது. இந்த சமயத்தில் எவ்வாறு அணுக முடியுமோ? அவ்வாறுதான் அணுக முடியும்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் ஸ்டெர்லைட் போராட்டம் வரை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என கூறினார்.